twitter

Tuesday 8 December 2015

மழை

மறைந்திருந்த
மனிதத்தை
வெளுத்து வாங்கி 
துவைத்து
தந்திருக்கிறேன்.
சாகடிக்க
நினைக்காதீர்கள்.
நினைத்தால்!!!
வருவேன்
மறுபடியும்.
‪#‎மழை‬

Thursday 27 August 2015

சதுரங்கன்

திரைப்படங்களில் ஒருவரையொருவர் நக்கல் நையாண்டி கேலி கிண்டல் செய்து புகழ்பெற்றவர்கள் கவுண்டமணி - செந்தில்.
 அதே போன்ற இரு பாத்திரங்களுக்கான பெயர்களை கற்பனைத்திருக்கிறேன்.
ஒருவர் "ரானா" .
இவர் வயதில் பெரியவர்.எங்கூர் பக்கம்  "ர" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயருடையவர்களை அப்படி அழைப்பது வழக்கம்.
 மற்றொருவன் சதுரங்கன்.
 வயதில் சிறியவன். குறுக்குமறுக்காய் கேட்பான்.இடக்குமடக்காய் பதிலளிப்பான்.
அவர்களின் முதல் உரையாடல் இதோ
ரானா:
எலேய்!  "சதுரங்கன்" னு ஒனக்கு நீயே பேரு வச்சிருக்கியாமுல்ல? அதென்னடே சதுரங்கன்?
சதுரங்கன் :
"ஸ்ரீரங்கன்" ன்னு பேரு இருக்கும் போது "சதுரங்கன்" னு இருக்கக் கூடாதா?.நம்மூர்ல ஆடுபுலிஆட்டம் வெளயாடுறா மா(தி)ரி படிச்சவுங்க வெளயாடுற ஒரு வெளயாட்டு செஸ்.நீரு செக்ஸ் ன்னு நெனச்சுராதேரும்.ஏஞ்சொல்லுதேம்னா இருவத்து நாலு மணி நேரமும் ஒம்ம நெனப்பு அப்பிடி.அந்த செஸ் வெளயாட்ட தமிழ்ல "சதுரங்கம்" ன்னு சொல்லுவாங்க.ரொம்ப விறுவிறுப்பான வெளயாட்டாம்.அதே மா(தி)ரி எப்பவும் விறுவிறுப்பா இருக்கணும் னு  நெனச்சுக்கிட்டு எனக்கு நானே வச்சுகிட்ட பேரு.
ரானா:
அதாவது  "எந்திரம்" ங்கறத மாத்தி "எந்திரன்" ன்னு வச்சா மா(தி)ரி ன்னு சொல்லுத.
சதுரங்கன் :
ஆமா.பெருசுன்னா பெருசு தான்.கப்பு ன்னு புடிச்சிக்கிட்டேரே. சரி சரி புதுசா பேரெல்லாம் வச்சிருக்கேன். "நால்லா இரு" ன்னு ஆசிர்வாதம் பண்ணுமுய்யா.
ரானா :
ஆசிர்வாதம் பண்ணுவேன் ஆனா துட்டு கேக்கக்கூடாது சரியா.

Friday 5 June 2015

நொந்த நூடுல்ஸ்

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் 
மெய்வருத்தக் கூலி தரும்
என்றார் திருவள்ளுவர்.அதே போல் ஒன்றை திரும்ப திரும்ப சொல்லும் போது நாளடைவில் அது உண்மையாகி விடும். அதை நிரூபிப்பது போல் நடந்துள்ள ஒரு சம்பவம் தான் இது.
 முன்பெல்லாம் பிரச்னைகளில் சிக்கி தவிப்பவர்கள்
                                 "நொந்து நூலாகி போனேன்" 

என்று புலம்புவார்கள். பின்பு புதுமையாய் சிந்தித்தவர்கள் அதே வார்த்தையை தரம் உயர்த்துவதாய் நினைத்து
 "நொந்து நூடுல்ஸ் ஆனேன்"
என்று கூறத் துவங்கினார்கள். தற்போது அந்த வார்த்தை எந்தளவிற்கு உண்மையாகி இருக்கிறது  என்பதற்கு சிறந்த உதாரணம் அதனை (நூடுல்ஸ்) தயாரித்த நிறுவனம் படும் பாடு.
அதற்கான காரணம் நமது உலகம் சுற்றும் பிரதமர் சீனாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு அங்கே மூன்று வேளையும் உணவாக நூடுல்ஸையே விருந்தளித்தார்களாம். அதில் கடுப்பானவர்கள் எடுத்த நடவடிக்கை தான் தற்போதைய நூடுல்ஸ் படும் பாடு என ஒருவர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.அந்த காரணம் உண்மையாயில்லாமல் இருக்கலாம். ஆனால் வெந்து நூடுல்ஸ் ஆக வேண்டிய ஒன்றை "நொந்து நூடுல்ஸ்" ஆகி என்று சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லியே நொந்து போக வைத்த பெருமை அதனை சொன்ன அனைவரையும் சார்ந்தது.

வேண்டுகோள் : 
இதனை படித்து நொந்து நூலாகி போனவர்கள் என்ன சாபம் வேண்டுமானாலும் இடுங்கள் "நொந்து நூடுல்ஸ்" ஆவாய் என்பதனை தவிர்த்து.