Tuesday, 29 August 2017
Monday, 17 July 2017
பம்பரம்
பல்சர், லேப்டாப், செல்பேசி
இவையெவையும்
வழங்கியதே இல்லை
நான் முதன்முதலில்
வாங்கிய பம்பரம் தந்த
பரவசத்தை.
இவையெவையும்
வழங்கியதே இல்லை
நான் முதன்முதலில்
வாங்கிய பம்பரம் தந்த
பரவசத்தை.
Wednesday, 18 January 2017
உறவன்(ர்)
நெல்லை▬பாளை▬வஉசி திடல் அருகே டீக்கடையில்.
#சல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த இளைஞனின் சாதியை கண்டுபிடிக்க ,'உங்க ஊரு பஞ்சாயத்து தலைவரை தெரியுமா,அவருக்கு நீங்க என்ன உறவு' போன்ற வழக்கமான கேள்விகளுக்கு கோபப்படாமல் மழுப்பலாய் பதிலளித்த இளைஞனிடம் கடைசியில் நேரடியாகவே
''தம்பி நீங்க என்ன ஆளுங்கப்பா"
என பவுன்சராய் கேள்வியை வீசியது பெருசு.
"நாங்க 'உறவர்' (உறவுக்காரன் என அர்த்தமாமாம்) ன்னு சொல்லிக்குவோம். ஒங்கள மாதிரி பண்டைய காலத்து ஆளுங்க எங்கள 'உறவன்' ன்னு சொல்லுவாங்க" என போராளி சிக்சர் பதிலடித்தான்.
'மறவன்' ன்னு இருக்கு 'குறவன்' ன்னு இருக்கு. இந்த 'உறவன்' புதுசால்ல இருக்கு . இது, 'நம்ம சாதியை விட உசந்த சாதியா இல்ல தாழ்ந்த சாதியா' என வடிவேலு மாதிரி தனக்கு தானே சொல்லிக் கொண்டு குழப்பத்தில் நகர்ந்தது பெருசு.
இதே கருத்தில் வந்துள்ள குறும் படம் (Published on Jun 6, 2018)
Monday, 15 August 2016
ஆக்ஸிஜன் கிலோ இருபது ரூபாய்
ஆகஸ்டு 15 ல் கொண்டாடப் படும் சுதந்திர தினத்தினை பெற நடத்தப்பட்ட முக்கிய போராட்டங்களில் ஒன்று உப்பு சத்தியாகிரகம்.உப்பு உற்பத்திக்கு ஆங்கிலேய அரசால் விதிக்கப் பட்ட வரிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் அது.அப்போது இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் பத்து பேர் உப்பு காய்ச்சினால் (உற்பத்தி செய்தால்) போதும்.ஆங்கிலேய அரசு பணிந்து விடும் என்றாராம் காந்தி.
சரி அதுக்கென்ன இப்ப?
அதே "கிராமத்துக்கு பத்து பேர்" சூத்திரத்தை வேறு மாதிரியாக மாற்றியமைத்து மறுபடியும் உள்ளே வந்திருக்கிறான் வெள்ளைக்காரன்.
கிராமத்திற்கு பத்து பேரிடம் பெப்ஸி விற்றால் போதும்,கிராமத்திற்கு பத்து பேரிடம் கேஎப்சி விற்றால் போதும், போன்ற நிறைய "போதும்"களோடு.இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்று விடலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு வந்திருக்கிறான்.இழந்தவனுக்கு தானே அதன் அருமை தெரியும்.போனால் திரும்ப கிடைக்காது என்பதற்கு அதென்ன பொழுதா? இல்லை உயிரா?.சுதந்திரம் தானே மறுபடியும் கிடைத்து விடும் அந்தவெள்ளைக்காரனுக்கு.நாமெப்போது அனுபவித்திருக்கிறோம் அதனை பற்றி சிலாகிப்பதற்கு.
யார் ஆண்டால் என்ன என்று வாழும் நமக்கு 1947 ஆகஸ்டு 15 ல் நடைபெற்றது அதிகார மாற்றம் தானே. ஐந்து வருடத்திற்கொரு முறை அதிகாரத்தினை மாற்றிக் கொடுப்போம்.1000லிட்டர் தாமிரபரணி தண்ணீருக்கு 40ரூபாய் தான் விலை என நிர்ணயித்த வெளைக்கார பெப்சிகாரன் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனுக்கும் ஒரு நாள் விலை வைப்பான்.அப்போது இரண்டு கிலோ சுத்தமான ஆக்ஸிஜனை இருபது ரூபாய் மானிய விலையில் வழங்கும் கட்சிக்கு ஐந்து வருடத்திற்கான ஆட்சியதிகாரத்தை மாற்றிக் கொடுப்போம்.
நல்ல வேளை "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" எனக் கேட்ட பாரதி இப்போது இல்லை.இருந்திருந்தால் அவனும் இரண்டு லிட்டர் கோலா பாட்டிலில் தனது தாகத்தை தணித்திருப்பான்.
விகடனில் வெளியான
விகடனில் வெளியான
இனி காற்றும் காசுதான்!
ஆக்ஸிஜன் விற்பனைக்கு
Tuesday, 26 July 2016
Thursday, 12 May 2016
செவ்வக நிலவு
அநேகமாய் அந்த கதையை ஆனந்த விகடனில் தான் வாசித்திருப்பேன்.அந்த கதைக்கு ஆசிரியர் வைத்திருந்த பெயர் "நீள் சதுர நிலவு".ஆனால் எனக்குள் என்னவோ அது "செவ்வக நிலவு" என இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.
வானில் தோன்றும் நிலவு பிறை வடிவிலோ அல்லது அரை முக்கால் அல்லது முழு வட்டமாகவோ தான் தோன்றும். இதென்ன செவ்வக நிலவு?
முந்தைய காலங்களில் இரவானவுடன் உறக்கம் வரும் வரை வீட்டின் வெளியில்,திண்ணைகளில், மாடி வீட்டில் இருப்பவர்கள் மொட்டை மாடிகளில் அமர்ந்து கதைபேசி விளையாடி களிப்பது வாடிக்கை அப்போது வட்ட நிலவையும் கண்டு களிப்போம்.
ஆனால் இன்று? இரவானால் எத்தனை பேர் நிலவை ரசிக்கிறோம்.அடுக்ககங்கள் நிறைந்த நகரில் வசிப்பவர்களை விட்டு தள்ளுங்கள்.கிராமங்களில் வசிப்பவர்கள் கூட நிலவை ரசிப்பதாக தோன்றவில்லை.உணவருந்தி விட்டு திண்ணைகளில் உறங்கி எழுந்த வயதானவர்கள் கூட வெளியில் வருவதில்லை. அவர்களும் என்ன செய்வார்கள்?.திண்ணை வைத்து யாருமே வீடு கட்டாத நிலையில் அவர்கள் மட்டும் எங்கு அமர்ந்து பழங்கதை பேசி ஞாபங்களை புதுப்பிப்பார்கள்?.
ஊதாங் குழலால் மூட்டி மூட்டி விறகடுப்பில் சமைத்தவர்கள் சடுதியில் எரிவாயு அடுப்பில் சமைத்து விடுகிறார்கள். இந்த மாற்றதினால் சேமிக்கப்பட்ட நேரம் எங்கே? வாய்க்காலுக்கோ,கிணற்றுக்கோ சென்று துவைத்து குளித்து வீட்டிற்கு தேவைப்படும் நீரையும் எடுத்து வந்தார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை.தெருக்கோடியில் தண்ணீர் குழாய்.அல்லது வீட்டில் தண்ணீர் குழாய்.அறைக்கு அறை தண்ணீர் குழாய். இதிலெல்லாம் சேமித்த நேரம் எங்கே?.
இப்படி சேமித்த நேரத்தினை திருடுவது பெரும்பாலும் "செவ்வக நிலவு".இரவானல் கண்டு ரசித்த நிலவை இடம் மாற்றி வைத்த தொலைக்காட்சி பெட்டியை "செவ்வக நிலவு" என அழைப்பது பொருத்தமாக இருக்கும் தானே?.
நான் வாசித்த அந்த "நீள் சதுர நிலவு" கதைக்காலம் குடும்ப அட்டைக்கு ஒரு இலவச தொலைக்காட்சி பெட்டி வருவதற்கு முந்தைய பஞ்சாயத்து டிவி காலம்.அந்த கதையில் வரும் ஊரில் பஞ்சாயத்து டிவி பழுதாகி விடுகிறது. அதனால் பாதிக்கப்பட்ட ஒருத்தி "டிவியை சரி செய்ய யாரும் முன் வரவில்லையே. செலவாகும் பணத்தை பெண்கள் திரட்டி தருகிறோம். ஆண்கள் யாரவது வல்லுநரை அழைத்து வந்து சரி பண்ண முடியுமா என சவால் விடுவாள்.உசுப்பேறிய ஒருவன் சவாலில் வெல்வான்.
அன்றிரவு தொலைக்காட்சியின் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் ஊரே லயித்துக் கிடக்கும். அவளும் அவனும் அவர்களோடு இல்லை என்பதை மறந்து.
அவளும் அவனும் ஒளிந்து கிடப்பார்கள் வெண்ணிலவின் மென்னொளியில் மறைந்து.
Monday, 21 March 2016
தந்துகி: நாய்தன் மற்றும் மனிநாய் - ஆதவன் தீட்சண்யா
தந்துகி: நாய்தன் மற்றும் மனிநாய் - ஆதவன் தீட்சண்யா: எதிரியையும் எல்லையையும் இன்னும் உருவாக்கிக் கொண்டிராத போதிலும் என்றாவதொரு நாள் கடல் முனியும், வனபூதமும் பறந்து வந்து தாங்கள் வாழும் நிலப்பரப்பை விழுங்கிவிடக்கூடும் என்கிற தீராத அச்சத்தைக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் எல்லை என்பதறியாமலேயே கடலுக்கும் வனத்துக்கும் இடைப்பட்ட தமது வாழிடத்தைக் காவல் செய்துவருகின்றனர்
Subscribe to:
Posts (Atom)


